கோவையில் 35-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்- நாளை 1,530 இடங்களில் நடக்கிறது..!

கோவை:
தமிழக அரசின் பன்முக நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா நோய்
தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை
கருத்தில் கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில், 35-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் ஆன 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்
பூஸ்டர் தவணை தடுப்பூசி அரசு தடுப்பூசி மையங்களில் செலுத்தப்படுகிறது.

இந்த பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பா் 30-ந் தேதி வரை மட்டுமே இலவசமாக
செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், கோவை
மாவட்டத்தில் 35-வது கொரோனா தடுப்பூசி முகாம் 1,530 இடங்களில் நாளை
நடைபெற உள்ளது. இதில் தகுதியான நபா்கள் இரண்டாம் தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.