ஜெயலலிதாவை ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக பார்த்தேன்-இளவரசி வாக்குமூலம்.!!

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் இன்று ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி விசாரணை ஆணையத்தின் முன் இருவரும் இன்று (மார்ச் 21) நேரில் ஆஜராகினர்.

விசாரணை ஆணையத்தின் முன் விளக்கம் அளித்த இளவரசி, “ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வந்த அப்போலோ மருத்துவமனைக்கு 75 நாட்களும் சென்றபோதும், ஜெயலலிதாவை ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன். கடந்த 2014-ம் ஆண்டில் சிறைக்கு சென்றபோது ஜெயலலிதா மன உளைச்சலில் இருந்தார். அதேபோல், கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அவர் உடல்நல்குறைவுடன் இருந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது, சசிகலா மட்டுமே அவருடன் இருந்து பார்த்துக் கொண்டார் ” என்று தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று முதல் முறையாக ஆஜராகியுள்ளார். விசாரணைக்கு ஆஜராக அவருக்கு ஏற்கெனவே 8 முறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், முதல் முறையாக அவர் இன்று ஆஜராகி உள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை செய்துள்ளது. இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், 2019-ல் இந்த வழக்கில் உரிய மருத்துவக் குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது. தற்போது ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆறுமுகசாமி ஆணையம் கடந்த மார்ச் 7 முதல் மீண்டும் விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எய்ம்ஸ் மருத்துவர்களும் காணொலி மூலம் விசாரணையில் பங்கேற்றிருந்தனர். அப்போலோ மருத்துவர்கள் 4 பேர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஒருவர் என மொத்தம் 5 பேர் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர். அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் பாபு மனோகர், அருள்செல்வம், ராமகிருஷ்ணன், சுந்தர் மற்றும் காமேஷ் உள்ளிட்டோர் மார்ச் 8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன்பும், பின்னும் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விளக்கம் அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் இன்று ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.