நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்-பரவசத்தில் பக்தர்கள்.!!

நாமக்கல்: பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக் கிழமையன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு காலை வடைமாலை சாற்றப்பட்டது.

தொடர்ந்து மஞ்சள், குங்குமம், திருமஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.