கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

ள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்கு ஒப்படைக்கும் படி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பான அறிக்கை ஒரு கவரில் மூடி முத்திரையிடப்பட்ட நிலையில் காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தெரிவித்துள்ளதாவது, நான்கு முறை இந்த வழக்கு சம்மந்தமாக சம்மன் அனுப்பியுள்ளோம். ஆனால், மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக ஒப்படைக்கவில்லை. இன்னும் இரண்டு மாதங்களில் இந்த விசாரணையானது முடிவடைய உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாணவியின் தந்தை கூறியதாவது, “மாணவி செல்போன் வைத்திருக்கவில்லை. விடுதி வார்டன் செல்போனில் இருந்துதான் தங்களுக்கு பேசினார்” என்று தெரிவித்தார்.

இதைக்கேட்ட நீதிபதி, செல்போனை ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை உள்ளது. மாணவி பயன்படுத்திய செல்போன் இருக்கிறதா? இல்லையா? என்று கேள்வி கேட்டார். இது குறித்து மாணவியின் தந்தை தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆதாரம் இருந்து அதனை மறைத்தால் அது சட்டப்படி குற்றம் ஆகும். அதற்காக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட நேரிடும். எனவே செல்போன் இருந்தால் அதை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.