சூறாவளி காற்றுடன் கனமழை – 1¾ லட்சம் வாழைகள் சேதம்.!!

சூறாவளி காற்றுக்கு 1¾ லட்சம் வாழைகள் சேதம் அடைந்தன. அதற்கு நிவாரணம் கிடைக்காத தால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

கோவை. மதுக்கரை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மஜல்லிப்பட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், தாளக்கரை, கரையாம்பாளையம், செஞ்சேரி, கள்ளப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில், அங்கு சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழைகள் முறிந்து சேதம் அடைந்தன.

இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் அளித்தனர். இதையடுத்து சேதமடைந்த வாழை தோட்டங்களுக்கு வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிப்பு விவரங்களை கணக்கெடுத்தனர்.

மேலும் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வாழைகள் சேதமடைந்த சில இடங்களை பார்வையிட்டார். அப்போது அவர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் விவசாயிகளுக்கு இன்னும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டம், அதன் சுற்று வட்டாரத்தில் வாழை சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது. சூறாவளி காற்றுடன் பெய்த கன மழைக்கு தாங்காமல் சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சரிந்து விட்டன. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு உள்ளது. அறுவடைக்கு ஒருசில மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில் வாழை மரங்களை சாய்ந்து விட்டன. இதனால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. முறிந்து விழுந்த வாழை மரங்களை அப்புறப்படுத்த ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். எனவே சேதமடைந்த ஒரு வாழைக்கு ரூ.200 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதனால் அவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் கூறினர்.