குருநாத.. இதுக்குமேல தாங்க முடியாது!! 15 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்… இன்றைய நிலவரம் இதோ..!

மிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் 15 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை :

19.04.2023 மற்றும் 20.04.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மிதமான மழை இருக்கும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்னும் கத்திரி வெயில் தொடங்காத நிலையில் ஈரோடு, கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் ஈரோட்டில் 40.6 டிகிரி செல்சியஸ், வேலூரில் – 39.9 டிகிரி செல்சியஸ், திருச்சி – 39.5 டிகிரி செல்சியஸ், நாமக்கல் – 39.5 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் – 39.0 டிகிரி செல்சியஸ், மதுரை – 39.8 டிகிரி செல்சியஸ், சேலம் – 39. 4 டிகிரி செல்சியஸ், கோவை – 38.7 டிகிரி செல்சியஸ், தர்மபுரி – 38.2 டிகிரி செல்சியஸ், திருத்தணி – 38.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் – 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2.8 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். சென்னை நுங்கம்பாக்கத்தில் – 36.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 1.3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக இயல்பை விட 3.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இருப்பினும் வெப்ப அலைக்கான அறிவிப்பு எதுவும் இல்லை என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இன்னும் சில தினங்களில் கத்திரி வெயில் தொடங்கும் நிலையில் வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.