16ம் தேதி பொது வேலை நிறுத்தம் – பஸ் ஊழியர் சங்கம் பங்கேற்பு..!

சென்னை: மத்திய அரசை எதிர்த்து, வரும் 16ம் தேதி, அகில இந்திய அளவில் நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில், தமிழக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளன.மத்திய அரசை கண்டித்து, அகில இந்திய அளவில், 16ம் தேதி வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை நடத்த, அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதையொட்டி, போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம், சென்னை தொ.மு.ச., தலைமையகத்தில் நடந்தது. இதில், ஒன்பது சங்கங்கள் சார்பில் நிர்வாகிகள் எம்.சண்முகம், நடராஜன், ஸ்ரீதரன், சுப்பிரமணியன், அன்பழகன், நாராயணசாமி, நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், மத்திய அரசை கண்டித்து நடக்கும் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பது என, முடிவு செய்யப்பட்டது.