கனடாவில் வேலை என கூறி 116 பேரிடம் ரூ.68 லட்சம் மோசடி செய்த பெண் சாமியார் கைது- இலங்கை கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

சென்னை: கனடாவில் ரூ.40 லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக 116 பேரிடம் ரூ.68 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் புகார்கள் குவிந்து வருவதால் கைது செய்யப்பட்ட பெண் சாமியாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இலங்கையை சேர்ந்த 7 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் ஆரோக்கியம் என்பவர் கடந்த மாதம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், இலங்கையை சேர்ந்த திண்டுக்கல் கயல் லதா, ரமணி, பரமேஸ்வரன், கிருஷ்ணா யாமினி பிரதீன், பிரதீன், சாய்சகாரியா, தீர்கவி ஆகியோர் அறிமுகமாகினர். அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், கனடா நாட்டில் ஒரு ெபரிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதற்கு 300 புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களை கனடா அரசாங்கம் தேர்வு செய்ய உள்ளது. இந்த பணியில் சேருபவர்களுக்கு கனடா நாட்டின் குடியுரிமையும் வழங்கப்படுகிறது. இதற்காக மாதம் ஊதியமாக ரூ.4 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறினர். அதை நம்பி எங்கள் தேவாலயத்திற்கு வரும் 116 பேரும் கனடா நாட்டிற்கு வேலைக்கு செல்ல முடிவு செய்தோம். அதற்கு ஒருவருக்கு ரூ.1 லட்சம் மற்றும் குடும்பத்துடன் செல்லும் நபருக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் 68 லட்சம் பணத்தை வசூலித்தனர். ஆனால் சொன்னபடி யாரையும் கனடா நாட்டிற்கு அனுப்பவில்லை.

பிறகு பணத்தை பெற்ற அவர்கள் மாயமாகினர். எனவே, எங்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்த இலங்கையை சேர்நத் 7 பேர் மீதும், ஏஜெண்டாக செயல்பட்ட மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த பெண் சாமியார் நடேஸ்வரி(45) என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இலங்கையை சேர்ந்த 7 பேருடன் கூட்டு சேர்ந்து நடேஸ்வரி பணத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட பெண் சாமியாரான ஏஜென்ட் நடேஸ்வரியை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்கள், போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இலங்கையை சேர்ந்த திண்டுக்கல் கயல் லதா, ரமணி, பரமேஸ்வரன், கிருஷ்ணாயாமினி பிரதீன், பிரதீன், சாய்சகாரியா, தீர்கவி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

பெண் சாமியார் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த பாதிக்கப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் புகார்கள் அளித்து வருகின்றனர். அதேநேரம், தலைமறைவாக உள்ள இலங்கை மோசடி கும்பல் குறித்த விபரங்கள் இவருக்கு மட்டும் தெரியும் என்பதால், பெண் சாமியார் நடேஸ்வரியை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து வருகின்றனர். அதற்கான பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.