சிவசேனா கட்சி சின்னம் முடக்கம்: திரிசூலம், உதயசூரியன் கேட்டு உத்தவ் தாக்கரே கோரிக்கை..!

புதுடெல்லி: சிவசேனா கட்சியின் பெயர் சின்னத்தை தற்காலிகமாக தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது.

மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக.வுடன் கூட்டணி வைத்து முதல்வரானார். இந்நிலையில் கட்சி பெயர், வில் – அம்பு சின்னத்துக்கு உரிமை கோரி முதல்வர் ஷிண்டே, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகிய இரு தரப்பினமும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்தேரி கிழக்குதொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் முதல்வர் ஷிண்டே பிரிவினர் போட்டியிடவில்லை. பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவுள்ளார். இதையடுத்து, இதற்கு முன்பு இருந்த நிலையை பின்பற்ற அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் உத்தவ் தலைமையிலான பிரிவு கூறியது.

அந்தேரி கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கவுள்ளதால், சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை தற்காலிகமாக முடக்கு வதாக தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது. மேலும்,வேறு பெயர்களையும், சின்னங்களையும் தேர்வு செய்து, அதன் முடிவை இன்று மதியத்துக்குள் தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தங்களின் சின்னங்களை தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிமுக, லோக் ஜனசக்தி கட்சியில் இதற்கு முன்பு இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டபோது, தேர்தல் ஆணையம் இது போன்ற முடிவை எடுத்தது. அதைப்பின்பற்றி தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கி, இரு பிரிவினரும் புதிய பெயர்கள் மற்றும் சின்னத்தை தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே பிரிவினர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தங்கள் கட்சிக்கு சிவசேனா (பாலசாகிப் தாக்கரே), சிவசேனா (உத்தவ் பாலசாகிப் தாக்கரே), சிவசேனா (பிரபோதங்கர் தாக்கரே) ஆகிய மூன்று பெயர்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்கவும், திரிசூலம், உதயசூரியன், தீபச்சுடர் ஆகிய சின்னங்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்கும்படியும் தெரிவித்துள்ளது.