தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று முதல்வர் விஜய் ஆற்றிய உரை, பேரவையில் பெரும் அரசியல் அனலைக் கிளப்பியுள்ளது.குறிப்பாக, கடந்த ஆட்சியில் டாஸ்மாக் மூலம் கட்சி நிதி (Party Fund) பெற்று ஆட்சி நடத்தினார்கள். அதை நாங்கள் தற்போது நிறுத்தியிருக்கிறோம்” என்று முதல்வர் விஜய் நேரடியாக திமுகவை விமர்சித்துப் பேசியதால், அவையில் வரலாறு காணாத அமளி வெடித்தது.
தனது உரையைத் தொடங்கிய முதல்வர் விஜய், தனக்கு எதிராக முன்வைக்கப்படும் தனிநபர் விமர்சனங்களுக்கு அதிரடியாகப் பதிலடி கொடுத்தார். “எதிர்த்துப் பேசினால்தான் தாங்கள் எதிர்க்கட்சி என்பதை நிரூபிக்க முடியும் என்று நினைத்துச் செயல்படும் எதிர்க்கட்சியினருக்கு என் முதற்கண் நன்றி. தவெகவைத் தேர்ந்தெடுத்து அரியணையில் அமரவைத்த தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிலர் நான் ஏதோ ஷூட்டிங்கில் இருந்து நேராக சட்டசபைக்கு வந்து முதலமைச்சர் ஆனது போல ஒரு பிம்பத்தை (Image) கட்டமைக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் – இது வெறும் ரீல் கிடையாது, ரியல்! நான் சினிமாவில் அரசியலைப் பேசியதாலேயே எனது திரைப்படங்கள் சந்தித்த, இப்போதும் சந்தித்து வருகிற நெருக்கடிகளும் சிக்கல்களும் ஒட்டுமொத்த தமிழகமும் அறிந்ததுதான். நடிகனாக வாழ்க்கையைத் தொடங்கினாலும், பல நிலைகளைக் கடந்து, மக்களின் இதயங்களில் இடம் பிடித்துத்தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். 1990-களிலேயே ரசிகர் மன்றமாக இருந்த காலத்திலேயே நாங்கள் மக்களுக்குத் துணையாக நின்றவர்கள்” என்று முழங்கினார்.தொடர்ந்து தனது கொள்கை நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், “பெரியாரை நாங்கள் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டோம். ஆனால், அவரது கடவுள் மறுப்புக் கொள்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதைத் தொடக்கத்திலேயே வெளிப்படையாக அறிவித்தோம். கட்சி ஆரம்பித்த உடனேயே சிஏஏ (CAA) சட்டத்திற்கு எதிராகத் துணிச்சலாக அறிக்கை வெளியிட்டோம்.
சமீபத்தில் கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் என் மனதில் ஆறாத வடுவாக, பெரும் வேதனையாக இருக்கிறது. மக்களைச் சந்திப்பதில் பல்வேறு அரசியல் நெருக்கடிகளும், பாதுகாப்பின்மையும் இருந்த சூழலில், கரூர் சம்பவத்தை வைத்து எங்கள் மீது பழி போட்ட கொடுமை எல்லாம் வேற லெவல்” என்று சாடினார்.
அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மறைமுகமாகத் தாக்கிய முதல்வர், “ஒரே குடும்பம் மட்டுமே முக்கியம் என்பது எங்கள் கொள்கை அல்ல; தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்பதைச் சொல்லும் ஆட்சிதான் இந்த தவெக ஆட்சி. காசு கொடுத்து வாக்கு வாங்கும் நச்சு கலாச்சாரத்திற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.
எங்கள் சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் எல்லாரும் புதியவர்கள் தான். எங்களுக்கு மக்கள் சேவை செய்ய மட்டும்தான் தெரியுமே தவிர, மக்கள் பணத்தைச் சுருட்டத் தெரியாது. கோயில் பணத்தையோ, கனிம வளங்களையோ கொள்ளையடிக்க எங்களுக்குத் தெரியாது. நமக்கு எதிராக நாம் எதிர்பாராத நபர்கள் எல்லாம் தற்போது ஒன்று சேருகிறார்கள்” என்றார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசிய முதல்வர் விஜய், “கடந்த ஆட்சியில் காவல் துறையைத் தன் வசம் வைத்திருந்த முன்னாள் முதல்வர், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார். கடந்த 10 மாதங்களாகத் தமிழகத்தில் முழுநேர சட்டம் ஒழுங்கு டிஜிபி-யே நியமிக்கப்படவில்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தகுதியான டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கெட போதைப்பொருட்கள்தான் முக்கியக் காரணம்” என்று குற்றம் சாட்டினார்.
இதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக் மூலம் கட்சி நிதி (Party Fund) வாங்கித்தான் கடந்த காலத்தில் ஆட்சி நடத்தினார்கள். அதை நாங்கள் இப்போது அதிகாரத்திற்கு வந்ததும் அதிரடியாக நிறுத்தியிருக்கிறோம்” என்று முதல்வர் விஜய் பேசத் தொடங்கியதும், திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அவையில் பெரும் கூச்சல் குழப்பமும் அமளியும் நிலவியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன், “முதல்வர் விஜய் பேசி முடித்ததும், எதிர்க்கட்சித் தலைவருக்குப் பேச உரிய வாய்ப்பு வழங்கப்படும்” என்று அமைதிப்படுத்தினார்.
அமளிக்கு நடுவே எழுந்த தவெக அமைச்சர் ராஜ்மோகன், “திமுக உறுப்பினர்கள் எங்கள் அமைச்சர்களையும், முதல்வரையும் பார்த்து ஒருமையில் பேசுகிறார்கள். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சபாநாயகர் உடனடியாகத் தலையிட்டு திமுக உறுப்பினர்கள் பேசிய அவதூறான வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், திமுகவின் கடந்த கால ஆட்சியை ‘டாஸ்மாக் பார்ட்டி ஃபண்ட்’ என்று முதல்வர் விஜய் விமர்சித்தது, தமிழக அரசியல் களத்தில் தற்போதைய பிரதான விவாதப் பொருளாக மாறியுள்ளது.







