பேஸ்புக் காதல்… மும்பை இளம்பெண்ணை கோவைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய வாலிபர்..!

கோவை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 27 வயது இளம்பெண். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். அப்போது வாலிபர் மும்பைக்கு சென்று இளம்பெண்ணுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு வாலிபர் இளம்பெண்ணிடம் காதலிப்பதாக கூறினார். அதற்கு இளம்பெண்ணும் சம்மதம் தெரித்தார். பின்னர் 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் வாலிபர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட கோவைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி இளம்பெண் கோவைக்கு வந்தார். பின்னர் வாலிபர் இளம்பெண்ணை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்க வைத்தார்.

அப்போது அவர் இளம்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இளம்பெண்ணிடம் இருந்து வாலிபர் பல்வேறு காலகட்டங்களில் ரூ.70 ஆயிரம் பணத்தையும் பெற்று இருந்தார். தனது காதலனுடன் இளம்பெண் ஜாலியாக இருந்து விட்டு மும்பைக்கு புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் இளம்பெண் வாலிபரிடம் தன்னை திருமணம் செய்யும் படி கூறினார். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனையடுத்து வாலிபர் இளம்பெண்ணிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.

இது குறித்து இளம்பெண் மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தும், பணத்தை பெற்றும் ஏமாற்றிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.