காதலை கைவிட மிரட்டிய வாலிபருக்கு பாட்டில் குத்து – கல்லூரி மாணவர் கைது..!

Broken beer bottle in hand, being used as a weapon

கோவை: தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகன் வசந்தராஜா (வயது 19). இவர் கோவையில் தங்கி சிங்காநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை வசந்தராஜா காதலித்து வந்தார். இது தொடர்பாக வசந்தராஜாவிற்கும், இளம்பெண்ணின் அண்ணனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று சில வாலிபர்கள் வசந்தராஜாவை மசக்காளிபாளையம் கல்லுக்குழி மைதானம் அருகே அழைத்து சென்றனர். அங்கு வைத்து வசந்தராஜாவிடம் இளம்பெண்ணை காதலிப்பதை கைவிடுமாறு வலியுறுத்தினர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த வசந்தராஜா சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சரவணன்(19) என்பவரை பாட்டிலால் குத்தினார். இதில் அவருக்கு தோள்பட்டை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. அவரது நண்பர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தராஜாவை கைது செய்தனர். இதேபோன்று வசந்தராஜா அளித்த புகாரின் பேரில், சரவணன்(19) மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மற்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.