முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

கோவை: முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படவுள்ளன. பள்ளிகள் பிரிவு (12 முதல் 19 வயது வரை), கல்லூரிகள் பிரிவு (17 முதல் 25 வயது வரை), பொதுப் பிரிவு (15 முதல் 35 வயது வரை) மற்றும் அரசு ஊழியா்கள் பிரிவு (வயது வரம்பில்லை) என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப் பிரிவுகளில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. தவிர இப்போட்டிகளுக்கு ஜனவரி 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.