நள்ளிரவில் கோவை அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வடமாநில வாலிபர்..!

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 35 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு இளம்பெண்ணும் அவரது கணவரும் தனித்தனி அறையில் படுத்து தூங்கினர். நள்ளிரவு 12 மணியளவில் வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அவர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். இதனையடுத்து அந்த வாலிபர் தப்பி ஓடினார். அப்போது அவர் படிக்கட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த இளம்பெண் தனது கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து இளம்பெண் மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி விஜய் (வயது 35) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.