காதல் திருமணம் செய்த ஒரு வருடத்தில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் பலாத்காரம்-வாலிபர் போக்ஸோவில் கைது.!

கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்த பிரபு (வயது 24). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 1 வருடங்களுக்கு முன்பு ஆனைமலையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் பிரபு இளம்பெண் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கு இளம்பெண்ணின் 17 வயது தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இந்த கள்ளக்காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். கடந்த மாதம் 25-ந் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது பிரபு சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுமியை கடத்தி சென்ற பிரபுவை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் பயன்படுத்திய செல்போன் டவரை போலீசார் கண்காணித்தனர். அப்போது பிரபு கோவையில் சிறுமியுடன் தங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கோவை வந்த ஆனைமலை போலீசார் சிறுமியுடன் தங்கி இருந்த பிரபுவை மடக்கி பிடித்து சிறுமியை மீட்டனர். பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையம் அழைத்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரபு சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மனைவியின் தங்கையை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.