எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கு… மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை மாஸ்டர் நீதிமன்றம் மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் கே.பழனிசாமி ஜன.30 மற்றும் ஜன.31 ஆகிய தேதிகளில் உயர்நீதி மன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மாஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி ஆஜராகவில்லை. அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி, இந்த வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ள ஆட்சேபனைக்குரிய அவதூறு கருத்துகளை நீக்கக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். அதையேற்ற மாஸ்டர் நீதிமன்றம். இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கே மாற்றி உத்தரவிட்டுள்ளது.