ஈசிஆர் இனி கருணாநிதி சாலை” யாக மாற்றம்- முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.!!

சென்னை : சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர். சாலை) இனி முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்டப்படும் என்று என நெடுஞ்சாலைத்துறையின் 75-வது ஆண்டு பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக நெடுஞ்சாலைத்துறையின் 75வது ஆண்டு பவள விழா சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், ஏற்கனவே முடிவடைந்த பணிகள் குறித்த புகைப்படங்கள் மாதிரிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் ஓய்வுபெற்ற பொறியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அழகான, தரமான, சரியான சாலைகள் அமைத்தாலே போதும், அனைத்து மக்களிடத்திலும் முழுமையான நல்ல பெயரை நாம் வாங்கிடமுடியும். ரோடு சரியில்லை என்றால் முதலில் மக்கள் திட்டுவது அரசை தான். அதேவேளை ரோடு தரமானது என்றால், ‘அடடா பரவாயில்லையே… பளிங்கு மாதிரி இருக்கே…’ என்று அரசைத்தான் மக்கள் பாராட்டுவார்கள். எனவே அரசை ஒரு நல்லப்பெயரை பெற்றுத்தர வேண்டுமென்றாலும் சரி, அவப்பெயரை பெற்றுத்தர வேண்டுமென்றாலும் சரி நெடுஞ்சாலைத்துறை தான் காரணமாக அமைந்திட முடியும்.

ரோடு போடுவதில் பெரிய சிக்கல், அதற்கான நிலங்களை கையகப்படுத்துவது தான். நில எடுப்பு பணிகள் தாமதமாக நடப்பதால் தான், பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வர தாமதமாகிறது என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்காக தான் 5 சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் கொண்ட 184 பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே நிலம் கையக்கப்படுத்துவதில் தாமதம் ஏற்படாது என்று நம்புகிறேன். ஆட்சி அமைத்த பிறகு என்னை வருத்தமடைய செய்யும் அளவுக்கு வந்த புள்ளிவிவரம் என்னவென்றால், சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழகம் என்பது தான்.

அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலை விபத்தில் சிக்குவோரின் முதல் 48 மணி நேர அவசர சிகிச்சை செலவை தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம்-நம்மை காப்போம் 48 என்ற திட்டத்தை கொண்டுவந்திருக்கிறோம். விபத்தில் சிக்கியோரை மருத்துவமனையில் சேர்ப்போருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை, விபத்தில் சிக்கும் வெளிமாநிலத்தவருக்கும் திட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நெடுஞ்சாலைத்துறை சாதனைகள் மற்றும் கிடைக்கும் பெருமைகளுக்கு கருணாநிதி தான் காரணம். அதை மனதில் வைத்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர். சாலை) இனி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்டப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். மேலும் புறவழிச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.” என்றார்.