இன்று முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ்… எப்படி விண்ணப்பிப்பது..?

இன்று காலை 6 மணி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் முன்பதிவு துவங்கியது. தமிழகத்தில் கோடை விடுமுறை துவங்கியிருக்கும் நிலையில் பலரும் மலைவாசஸ்தலங்களை நோக்கி சென்று வருகின்றனர்.

நாளை மே 7ம் தேதி முதல் தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் செல்ல பிற மாவட்ட, மாநில மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை இ – பாஸ் பெறுவதற்கான முன்பதிவு துவங்கியது. இது குறித்த அதிகாரப்பூர்வ இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பகுதிகளில் நாடு முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அதனால், மலைப்பாதைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான சுற்றுலா பயணிகளின் வருகையால், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,”கொரோனா காலத்தில் நடைமுறையில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை ஊட்டி, கொடைக்கானலில் மே 7 ம்தேதி முதல் ஜூன் 30 ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும். இந்த இ -பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர் வருகின்றனர். ஒரு நாள் சுற்றுலாவா அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும்” என்று திண்டுக்கல், நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது.

மேலும், “இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வேண்டும். இ-பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும். இ-பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும். ஊட்டியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவை ஏற்று “ஊட்டிக்கு செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை நாளை மே 7 முதல் அமல்படுத்தப்படுகிறது.

அதே சமயம் உள்ளூர் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும், அரசு பேருந்துகளில் வருகிற சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களை, மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் வருகின்ற வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் தேவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இ – பாஸ் பெற இணையதள முகவரியை அறிவித்தது நீலகிரி மாவட்ட நிர்வாகம். விண்ணப்பிப்பவர்கள் epass.tnega.org என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று நீலகிரி ஆட்சியர் அருணாவும், திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடியும் தெரிவித்துள்ளனர். கொடைக்கானலில் அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர் வீழ்ச்சி அருகில் உள்ள சுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ பாஸ் தொடர்பான துரித நடவடிக்கைக்கு வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறைஅலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.