GPT4-ல் இருக்கும் வியத்தகு அம்சங்கள்… யூடியூபர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

மைக்ரோசாப்ட் நிறுவன முதலீட்டில் இயங்கி வரும் OpenAi நிறுவனத்தின் ChatGPT கருவி தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

ஒருபுறம் இதனால் பெரும்பாலான மக்கள் வேலை இழக்கும் அபாயம் இருக்கிறது என்றாலும், மறுபுறம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமடைந்து வருகிறது. ChatGPT-ன் செயல்திறனை மக்கள் இன்னும் முழுமையாக பயன்படுத்தாத நிலையில், அடுத்த பதிப்பான GPT-4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இருந்த ChatGPT வெர்ஷனில், நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தான் செயற்கை நுண்ணறிவு செயல்பட்டது. மேலும் நாம் கொடுக்கும் உள்ளீடுகளுக்கு மனிதர்களைப் போலவே சிந்தித்து அதற்கு ஏற்ற பதில்களை கொடுக்கும் தன்மையும் பெற்றிருந்தது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய வெர்ஷனில், வெறும் கேள்வி பதில்கள் மட்டுமின்றி, நாம் கொடுக்கும் வீடுகளுக்கு ஏற்ற வகையில் புகைப்படம் மற்றும் காணொளி போன்றவற்றை உருவாக்கலாம்.

ஜெர்மன் நாட்டு செய்தி இணையதளமான HEISE சில புதிய பதிப்பு பற்றிய சில தகவல்களை வெளியிட்டுள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள GPT-4ல் கொடுக்கும் உள்ளீடுகளுக்கு பதில்களை மட்டும் பெறாமல், பல வீடியோ, ஆடியோ, படங்கள் உள்ளடக்கிய கோப்பு களையும் பெற முடியும் என்று தெரிவித்துள்ளது. ஒரு படி மேலே போய், நீங்கள் உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியை திறந்து ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பினால், அது என்ன புகைப்படம் என்பதிலிருந்து, குளிர்சாதன பெட்டியில் இருக்கும் பொருட்களை கணக்கீடுகள் செய்து, அதை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்பது வரை குறிப்புகளைக் கொடுத்துவிடுமாம்.

இதை மேலும் துல்லியமானதாக உருவாக்க, Be My Eyes என்ற நிறுவனத்துடன் இணைந்து OpenAI நிறுவனம் பணியாற்றி வருகிறது. இந்த பதிப்பில் பதில்களின் துல்லிய தன்மையை 40% அதிகரித்துள்ளதாகவும். “ஏதோ ஒரு பதிலை” அளிக்கும் தன்மையை 80% சதவீதம் வரை குறைத்துள்ளதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பதிப்பை தற்போது அனைவராலும் பயன்படுத்த முடியாது. ChatGPT Plus சந்தாதாரர்கள் மட்டுமே இதை அணுகக் கூடிய வகையில் வெளியிட்டுள்ளார்கள். அடுத்த வெர்ஷனில் இதில் மேலும் பல அம்சங்கள் இணைக்கப்பட்டு, எல்லா பயனர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் டெக் துறையினருக்கும் ஜாக்பாட்டாக அமைந்திருக்கிறது.