நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக – அமைச்சர் துரைமுருகன் தகவல்..!

வேலூர்: நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில் தமிழக அரசின் ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லட்சுமி தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பங் கேற்ற நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

மேல்பாடி ஊராட்சியில் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம், ரூ.12.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தரைப்பாலம், ரூ.19.46 கோடியில் நடைபெற்று வரும் பொன்னை அணைக்கட்டு புனரமைப்பு பணிகள், மேல்பாடி ஊராட்சியில் ரூ.42.68 லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் கால்நடை மருந்தக கட்டிட பணிகள், பொன்னை அரசு மேல்நிலை பள்ளிகளில் அவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர் துரைமுருகன், செய்தியாளர்களிடம் கூறும் போது, ”முல்லை பெரியாறு விவகாரத்தில் ஒன்றும் பிரச்சினையில்லை. இது தொடர்பாக கேரள அரசுடன் பேச்சு நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது. அதேபோல், மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசு எவ்வளவு ஆய்வு செய்தாலும், படம் வரைந்தாலும் அந்த திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதலும், மத்திய அரசு ஒப்புதல் பெற்றாக வேண்டும். அதைஎல்லாம் மீறி மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது. கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவக் குமாரின் தொகுதி என்பதால் இதனை வேகமாக செய்கிறார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகள் குறித்து நீர்வளத்துறை சார்பில் மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பவுள்ளோம். தமிழ்நாட்டில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதே போல், தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்கள் எவ்வளவு வெற்றியடைந்துள்ளது என்பது மக்களுக்குத் தெரியும். அரசியல் என்பதே திருவிளை யாடல்தான். ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறுவது போன்ற திடீர், திடீர் செய்திகள் வரும்.

இவைகள் அனைத்தும் பழையது தான். நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. காங்கிரஸ் மட்டும் பேசிவிட்டு சென்றுள்ளனர். தற்போது, திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இண்டியா கூட்டணி இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை.

கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளனர், யார் செல்கிறார்கள் என்பது பின்னரே தெரியவரும். அரசியலில் திமுகவை எதிர்த்து நிற்பவர்கள் அடுத்த தேர்தலில் எங்களுடன் கூட்டணிக்கு வரு வார்கள். முந்தைய தேர்தலில் அக்கட்சிகளுக்கு எதிராக பேசியதை தற்போது வெளிப்படுத்துவது தவறான அணுகு முறையாகும்” என்றார்.

இந்த ஆய்வின் போது மேல் பாலாறு வடிநில கோட்ட கண் காணிப்பு பொறியாளர் ரமேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் மணிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.