அயோத்தி ராமர் கோயிலில் குவியும் பக்தர்கள்… முதல் நாள் காணிக்கை இத்தனை கோடியா..?

யோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயிலில் பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை முடிவடைந்ததையடுத்து, அதற்கடுத்த நாள்முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பால ராமரைக் காண நாடு முழுவதிலுமிருந்து மக்கள் சாரை சாரையாக அயோத்திக்குப் படையெடுத்துச் சென்றவண்ணம் இருக்கின்றனர். லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையால், அயோத்திக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் அளவுக்கு அயோத்தி ஸ்தம்பித்து வருகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக மத்திய அமைச்சர்கள் அயோத்தி செல்வதை சிறிது நாள்கள் தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடியே கோரிக்கை வைத்தார்.

இதுபற்றி பேசிய அயோத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரவீன் குமார், “பக்தர்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றனர். கூட்டத்தைச் சமாளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன. அதேசமயம், அதிகரித்து வரும் கூட்டத்தைக் கருத்தில்கொண்டு, பக்தர்கள் தங்களின் வருகையை இரண்டு வாரங்களுக்குப் பிறகு இருக்கும் வங்கியில் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பொதுமக்கள் தரிசனத்துக்கான முதல் நாளில், ஆன்லைனில் மட்டுமே மூன்று கோடி ரூபாய்க்கு மேல் காணிக்கை வந்திருப்பதாக ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பேசிய அறக்கட்டளையின் அறங்காவலர் அனில் மிஸ்ரா, “பிராண பிரதிஷ்டை விழா அன்று அயோத்தி ஸ்ரீ ராம் மந்திர் அறக்கட்டளை, 10 நன்கொடை கவுன்ட்டர்களை (Counter) திறந்தது. இதுமட்டுமல்லாமல், நாட்டின் பல பகுதிகள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்தும் பல பக்தர்கள் ராமருக்கு ஆன்லைன் மூலமாக நன்கொடைகளை அனுப்பியிருக்கின்றனர். மேலும், பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட முதல்நாளில் (செவ்வாய்) ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ராமர் கோயிலைப் பார்வையிட்டனர்.

அன்று ஒருநாளில் மட்டும் ரூ.3.17 கோடி காணிக்கை ஆன்லைனில் வந்தது. புதன்கிழமை பெறப்பட்ட நன்கொடை தொகை அதற்கடுத்த நாளில் எண்ணப்பட்ட பிறகு தெரியவரும். அதோடு, நேரடியாக வழங்கப்படும் நன்கொடை தொகைகள், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று கணக்கிடப்படும்” என்று தெரிவித்தார்.

இன்னொருபக்கம், அதிகரித்துவரும் பக்தர்கள் கூட்டத்தால், கோயில் நிர்வாக தரப்பிலிருந்து தரிசன நேரமும் நீட்டிப்பட்டிருகிறது. அதன்படி, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, மாவட்ட நீதிபதி நிதீஷ் குமார் அறிக்கையில், பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட இரண்டாவது நாளான நேற்று, இரவு 10 மணி வரையில் மொத்தமாக 2.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.