இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா… மீண்டும் பொதுமுடக்கமா.? 4வது அலை வந்துவிடுமோ… அச்சத்தில் மக்கள்.!!

இந்தியாவில் கொரோனா 4-வது அலை வந்து விடுமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பானது தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 21ஆம் தேதி அன்று 1549 ஆக தொற்று பாதிப்பு இருந்துள்ளது.

இதை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை மாநிலங்கள் முழுவதும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மார்ச் 22ஆம் தேதி அன்று கொரோனா பாதிப்பானது 1581 என்று இருந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி மொத்த பாதிப்பானது 1778 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த எண்ணிக்கையானது நேற்று காலை 8 மணி வரையில் பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு படி,1938 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனாவின் 3-வது அலையானது ஓய்ந்து விட்டதாக மக்கள் நிம்மதி அடைந்த நிலையில், புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா 4-வது அலை வந்து விடுமோ என மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சம் எழுந்துள்ளது.

மேலும் அதன் விளைவாக நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு விடுமோ என்ற பீதியும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனிடையே நாடு முழுவதும் நேற்று வரை மட்டும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 182.23 கோடி டோஸ் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே கொரோனா 4-வது அலை வந்தாலும் அதை எதிர்த்து சமாளிக்கலாம் எனவும், மீண்டும் லாக்டவுன் போடும் அளவுக்கு நிலைமை வராது என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.