கோவையில் தொடர் கன மழை: நொய்யல் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்- நிரம்பி வழியும் குளங்கள், குட்டைகள்..!!

கோவையில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வபோது கனமழையும் பெய்து
வருகிறது. இதனால் கோவையில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து
அதிகரித்துள்ளது.

சிறுவாணி ஆற்றில் இருந்தும், நொய்யல் ஆற்றில் இருந்தும் வெள்ளம் கரைபுரண்டு வருகிறது. இதில் நொய்யலின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில் அதிக அளவு நீர் வெளியேறுகிறது. இதனால் பேரூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் உள்ள பாலத்தை தொட்டப்படி வெள்ளம் செல்கிறது. இதனை அந்த வழியாக சென்ற பொது மக்கள் பார்த்து மகிழ்ந்தனர். நொய்யல் ஆற்றில் இருந்து வரும் வெள்ளம் சித்திரைச்சாவடி அணை,
ராஜவாய்கால், காலம்பாளையம் அணைகட்டு, புட்டுவிக்கி, குனியமுத்துர்
அனைகட்டு ஆகிய இடங்களுக்கு வந்து கோவையில் உள்ள அனைத்து குளங்களுக்கும்
பிரிந்து செல்கிறது.

இதனால் பேரூர் செட்டிப்பாளையம் பெரியகுளம், சொட்டையான்டி குளம்,
கங்காநாராயசமூத்திரம், வேடப்பட்டி புதுகுளம், கோளம்பதி குளம்,
நரசிம்மாபதி குளம், செல்வசிந்தாமணி குளம், உக்கடம் வாலாங்குளம், பெரியகுளம் ஆகியவை 99 சதவீதம் நிரம்பி உள்ளது. இனி வரும் காலங்களில் பெய்யும் மழையில் அனைத்து குளங்களும் நிரம்பும் நிலையில் உள்ளது. குளங்களில் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் கோவையில் அனைத்து இடங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாசன வசதி பெரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர் மழையால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் மட்டும் பாதிப்பு அடைந்து உள்ளனர். நொய்யல் ஆற்று வெள்ளத்தால் தென்னமநல்லூர் பகுதியில் தென்னந் தோப்பு, வாழை தோட்டங்களில் நீர் புகுந்தது. இதே போன்று பேரூர் பகுதியில் வாழை
தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. சித்திரைச்சாவடி அணையில் 2 அடி
உயரத்துக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தொடர்ந்து பெய்த வரும் மழையால் நீரின் அளவு மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
இதனால் பொது மக்கள் நொய்யல் ஆற்றில் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ, இரவு நேரங்களில் செல்லவோ வேண்டாம் என்று பொது பணிதுறையினர் எச்சரிக்கை
விடுத்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை தாமதமாக பெய்தாலும் குளம், குட்டைகளில் வெள்ளம் நிரம்பி வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுபாடு நீங்கி உள்ளது. மேலும் கோவை முழுவதும் குளிர்ந்து இருப்பதால் பொதுமக்கள், விவசாயிகள்
மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.