திருமணமான முன்னாள் காதலனுடன் கல்லூரி மாணவி ஓட்டம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 20 வயது மாணவி.இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.பின்னர் 2 பேரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு மாணவியின் காதலன் வேறு ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் வாலிபருக்கும், மாணவிக்கும் மீண்டும் நெருக்கம் ஏற்பட்டு 2 பேரும் பழகி வந்தனர்.
இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லாமல் தனது காதலனை சந்தித்தார். பின்னர் 2 பேரும் ஓட்டம் பிடித்தனர்.நீண்ட நேரம் ஆகியும் கல்லூரிக்கு சென்ற தங்களது மகள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து அவர்கள் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்கள்.