டீ கடையில் ஏற்பட்ட தகராறு: 2 பெண்கள் மீது சரமாரி தாக்குதல் – இருவர் கைது..!

மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (60). இவரது மனைவி தனலட்சுமி (56). இவரது தங்கை அம்சவேணி (50). இவரது கணவர் கோவிந்தராஜ் (55). இவர்கள் திருப்பூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அம்சவேணி தனது கணவருடன் மேட்டுப்பாளையம் வந்து தனது அக்காள் மற்றும் அக்காளின் கணவருடன் சேர்ந்து ஜடையம்பாளையம் பகுதியில் வீட்டு மனை பார்ப்பதற்காக நேற்று சென்றனர். பின்னர் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் டீ சாப்பிட சென்றனர். அப்போது அங்கு குட்டையூர் பகுதியை சேர்ந்த நிவேந்த் (30) என்பவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களான காரமடையை சேர்ந்த ராஜேஷ்(34), அருண்குமார்(32), விக்னேஷ்(32) உள்ளிட்டோருடன் பேக்கரிக்கு வந்தார்.
அப்போது இரு தரப்பினருக்கும் கடையில் பொருட்கள் வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி 4 பேரும் சேர்ந்து குடும்பத்தினருடன் வந்த பெண்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் பெண்கள் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காரமடை போலீசார் ராஜேஷ், நிவேந்த் ஆகிய 2 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். போலீசார் தேடுவதை கண்டதும் அருண்குமார், விக்னேஷ் உள்ளிட்ட இருவரும் தலைம றைவாகி உள்ளனர்.அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.