ஆன்லைனில் வீடியோ பார்த்தால் வருமானம் என கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.53 லட்சம் மோசடி..!

கோவை வெள்ளலூரைச் சேர்ந்தவர் சரவணன்.இவரது மகன் அன்பழகன் (வயது 24). பட்டதாரியான இவர் வேலை தேடிக் கொண்டிருந்தார். சம்பவத்தன்று அன்பழகன் தனது பேஸ்புக் பக்கத்தில் வேலை வாய்ப்பு ஏதாவது உள்ளதா என தேடிக் கொண்டிருந்தார். அப்போது வேலை சம்பந்தமாக ஒரு லிங்க் வந்தது. அதனை அழுத்தி அன்பழகன் உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் அன்பழகனை வட மாநிலத்தில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் நாங்கள் அனுப்பும் விளம்பர வீடியோவை நீங்கள் பார்த்தால் ஒரு வீடியோவுக்கு ரூ.50 அனுப்பப்படும் என கூறினர். இதனையடுத்து அன்பழகன் 7 வீடியோக்களை பார்த்தார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிற்கு ரூ.350 பணம் வந்தது. அதன் பின்னர் அன்பழகனை தொடர்பு கொண்ட அந்த நபர்கள் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு ஏராளமான வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினர்.
இதனை உண்மை என நம்பிய அவர் அந்த மர்மநபர் அளித்த வங்கி கணக்கிற்கு 3 தவணைகளில் ரூ.7.53 லட்சம் பணத்தை தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து அனுப்பி வைத்தார். ஆனால் அந்த மர்மநபர்கள் அவர்கள் கூறியபடி அன்பழகனுக்கு பணம் எதுவும் அனுப்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை அளிப்பதாக கூறி பட்டதாரி வாலிபரை ஏமாற்றிய மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.