கோவை அரசு மருத்துவமனையில் 25 பேர் காய்ச்சலுக்கு அனுமதி- தண்ணீரை காய்ச்சி குடிக்க டீன் நிர்மலா அறுவுரை..!

கோவை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக வெயில், மழை, குளிர் என பருவநிலை மாறி மாறி வருகிறது.

இதை மக்கள் பொருட்படுத்தாமல் இருப்பதால், காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர்.
மழைக்காலங்களில் அசுத்தமான குடிநீர் குடிப்பதாலும், மழைநீரில் நனைந்த உணவுகளை உண்பதாலும் சளி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படுகிறது.வைரஸ் கிருமிகளாலும், கொசு உற்பத்தி அதிகரிப்பதாலும், மலேரியா, டெங்கு போன்ற பெரிய அளவிலான வியாதிகள் பரவும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-
காய்ச்சல் பாதிக்கப்பட்டவர் அனுமதிக்கப்பட்டு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. டெங்குவுக்கு 5 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 20 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்று சூழ்நிலைகளில், குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், ஆஸ்துமா போன்ற தொந்தரவு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும.

தூங்கச் செல்லும் முன்பு சுடுதண்ணீரில் வாய் கொப்பளிக்கும்போது, பெரும் பாலான தொண்டை பிரச்சிகளை தவிர்க்கலாம். பள்ளி குழந்தைகள் முககவசம் அணிந்து செல்ல வேண்டும்.ஐஸ், குளிர்பானங்கள், குளிர்ச்சியான உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பதால் காய்ச்சலில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.