கோவை மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபர் கைது..!

கோவை பாப்ப நாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் ஒரு மளிகைக்கடை செயல்பட்டு வருகிறது.

இந்த மளிகைக்கடைக்கு அடிக்கடி வரும் வாலிபர் ஒருவர் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெண்களை தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்தார். இதனை மளிகைக் கடைக்காரரின் மனைவி பார்த்துள்ளார். இது குறித்து அவர் தனது கணவரிடம் தெரிவித்தார்.
சம்பவத்தன்று மீண்டும் கடைக்கு வந்த வாலிபர் பெண்களை தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்தார். இதனை பார்த்த மளிகைக் கடைக்காரரின் மனைவி இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் உடனடியாக விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அவரை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பழையூரை சேர்ந்த மோட்டார் வெல்டர் தியாகராஜன் (வயது 35) என்பது தெரிய வந்தது. இவர் தினசரி தனது வீட்டில் நடை பயிற்சி செல்வதாக கூறி விட்டு வெளியே வருவார். பின்னர் மளிகை கடைக்கு சென்று செல்போன் பேசுவது போல நடித்து கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை தனிமையில் ரசித்து வந்தது தெரிய வந்தது.

தியாகராஜனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது. அவர் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளாரா என்பதை கண்டு பிடிப்பதற்காக செல்போனை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். கைது செய்யப்பட்ட தியாகராஜனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.