மத்திய அரசு என்று சொன்னாலே முதல்வர் ஸ்டாலின் நடுங்குகிறார்- சி.வி.சண்முகம் கடும் விமர்சனம் ..!

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் வேண்டும், திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ள மதுவினால் உயிரிழப்பு ஏற்படுவது மற்றும் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்யப்படுவதை கண்டித்தும் 15 அடி உயரமுள்ள மதுபாட்டிலில் 10 ரூபாயுடன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தின் நடுவே பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி என்றால் யாருக்கும் தெரியாது. பத்து ரூபாய் அமைச்சர் என்றால் எல்லாருக்கும் தெரியும். கோடிக்கணக்கில் கொள்ளையடித்த அமைச்சரை நீக்காமல் இலாகா இல்லாத அமைச்சராக திமுக அரசு பதவியில் வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

சென்னையில் ஒரு நாள் மழைக்கே வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனை பற்றி கவலைப்படாமல் முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூரில் தனது தந்தைக்கு கோட்டத்தை திறந்து வைக்கிறார். தமிழக முதலமைச்சர் செயலிழந்து தடுமாறி கொண்டிருக்கிறார். மேலும் அவர் மத்திய அரசை கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறார். பணம் வாங்கி கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த செந்தில் பாலாஜி மீது ஸ்டாலின் தலைமையில் உள்ள காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அமலாக்க துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தமிழக குற்றப்பிரிவு காவல் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

தவறு செய்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அப்போதைய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்காமல் பழி வாங்கும் நடவடிக்கை என கூறுகிறது. எந்நாளும் அவரை காப்பாற்ற முடியாது. அண்ணா நகர் ரமேஷ், சாதிக்பாஷாவின் நிலைமை தான் செந்தில்பாலாஜிக்கு ஏற்படும். செந்தில்பாலாஜி பாவம் அவர் எங்களோடு இருந்தவர் என்பதால் இதனை கூறுகிறேன். இல்லாத நோய்க்கு சிகிச்சை பெற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி ஓடி ஓடி வாக்கு சேகரிக்க முடியாது. இதன் பின்னர் முதலமைச்சர் குடும்பத்தினர் காப்பாற்ற மாட்டார்கள் என தெரிவித்தார். இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் முதலமைச்சர் தனது தந்தைக்கு பேனா அமைப்பது, கோட்டம் அமைப்பதை விட வேற எதுவும் செய்யவில்லை என்றார்.