வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு..!

கோவையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கோவையில் கடந்த சில நாட்களாக காலையில் இருந்தே மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து சில பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக சாலையில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள சாடிவயல் சோதனைச்சாவடியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் மூலம் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
இதை போலவே கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் நீர்மட்டம் 15 அடிக்கும் குறைவானது.
இதற்கிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் படிப்படியாக அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்தது.
இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து 23 அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து 10 கோடி லிட்டர் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 73 மி.மீட்டர் மழையும், அடிவார பகுதியில் 29 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.
தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அதுபோன்று கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றும் மழை பெய்தது.
அதுபோன்று சோதனை சாவடி அருகே உள்ள சாடியாற்றில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. இதனால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் அந்த ஆற்றுக்குள் இறங்குவதை தடுக்கவும் வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்