கோவையில் ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு..!

கோவை: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

மதுக்கரை வனச் சரகத்தில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையிலான இந்த கண்காணிப்பு அமைப்பை, வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேற்று தொடங்கிவைத்துப் பேசியதாவது: கோவையில் மனித – யானை மோதல் கணிசமாக அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் குடியிருப்புகள், நிலப் பயன்பாட்டு முறை, விவசாய நடைமுறை, ஆக்கிரமிப்பு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாகும்.

மதுக்கரை வனச்சரக பகுதி: கோவை மாவட்டத்தில் 2021முதல் 2023 வரையிலான 3 ஆண்டுகளில் 9,028 முறை யானைகள் வழிதவறி வெளியேறியுள்ளன. இவ்வாறு வெளியேறும் யானைகள் மதுக்கரை வனச்சரக பகுதியில் ரயில் மோதி உயிரிழந்து வருகின்றன. கடந்த 2008 முதல் இதுவரை 11 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. இதைத் தடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து கேரளா செல்லும் ரயில் வழித்தடம் வனப் பகுதியை உள்ளடக்கியது. புதிய தொழில்நுட்பத்தில் மதுக்கரை வனச் சரகத்தில் 7 கிலோமீட்டர் தொலைவில் ஏ மற்றும் பி என இரண்டு ரயில் தண்டவாளப் பகுதிகளில், 12 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து, உயர் ரக கேமராக்கள் மூலம், தண்டவாளத்தையொட்டிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

எச்சரிக்கை சிக்னல்: இரவு நேரங்களில் தெர்மல் இமேஜ் மற்றும் பகல் நேரத்தில் கேமரா வீடியோ பதிவுகள் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. 150 மீட்டரில் ஆரஞ்சு, 100 மீட்டரில் மஞ்சள், 50 மீட்டரில் சிவப்பு என வெவ்வேறு நிற எச்சரிக்கை சிக்னல்கள் பெறப்பட்டு, கண்காணிப்பு அறையில் இருந்து வனத் துறை மற்றும் ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதன் மூலம் ரயில் ஓட்டுநருக்கு தகவல் அனுப்பிவைக்கப்பட்டு, ரயிலை மெதுவாக இயக்கிச் செல்ல முடியும். இதனால், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க முடியும்.

மேலும், யானைகள் நடமாட்டத்தை தொடர்ச்சியாக பதிவுசெய்து, செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்காலத் திட்டமிடலுக்குத் தேவையான தரவுகளைப் பெற முடியும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு பேசும்போது, ”ட்ரோன் மூலமும் யானைகள் நடமாட்டத்தைக் கண்டறிந்து, ரயில் மோதி உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனத் துறையை நவீனப்படுத்த ரூ.52 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்பட உள்ளது’ என்றார்.

நிகழ்ச்சியில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுப்ரத் மொகபத்ரா, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் எஸ்.ராமசுப்பிரமணியன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, மாவட்ட வனப் பாதுகாவலர் என்.ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.