ரூ.250 கோடியில் 6 தளங்களுடன் அடுக்குமாடி கார் பார்க்கிங்-சென்னை விமான நிலையத்தில் விரைவில் வருகிறது.!!

சென்னை: விமான நிலைய வளாகத்திற்குள் முன்பகுதியில், 3.36 லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில், ₹250 கோடி திட்டத்தில் 6 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி வாகன நிறுத்தம், மற்றும் வணிக வளாகங்கள், முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வு அறைகள் கட்டும் பணி, 2018ல் தொடங்கியது. இதன் பணிகள் வேகமாக நடத்தப்பட்டு திறப்புக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஆறுதளங்கள் கொண்ட இந்த வளாகத்தில் 2,100 கார்கள் வரை நிறுத்தமுடியும். இந்த அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடத்திலிருந்து விமான நிலையத்திற்கு நடந்து செல்லும் வகையில், இணைப்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் மீது, மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: அடுக்குமாடி வாகன நிறுத்தம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும்பணி, முடிவடையும் நிலையில் உள்ளது. வளாகத்திற்குள் வாகனங்கள் செல்லும் வகையில், சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விமான நிலையத்திற்கும், வணிக வளாகத்திற்கும் இடையேயான இணைப்பு பாலம் அமைக்கும் பணிகள் 2021ல் முடிந்தன. பயணிகள் நடந்து செல்ல வசதியாக, இந்த மேம்பாலத்தின்மீது, நீள்வட்ட வடிவில், மேற்கூரைஅமைக்கும் பணியும் நடந்துவருகிறது. இதுவரை 75% பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் முடிந்ததும், அதன் மீது கூரைகள் அமைக்கப்படும். அனைத்து பணிகளும் முடிந்ததும், விரைவில் அடுக்குமாடி வாகனம் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினர்.

சென்னை விமான நிலைய அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இதையே கூறிவருகின்றனா். அப்போது 2021 டிசம்பா் இறுதிக்குள் அடுக்குமாடி கார் பார்க்கிங் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்று உறுதியாக கூறினர். ஆனால் 2022 மாா்ச் ஆகிவிட்டது.தற்போது 75% பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறுகின்றனா். எனவே பணிகள் முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வருவது இந்த ஆண்டு இறுதியாகலாம் என்று தெரிகிறது.