சதுரங்க வேட்டை பட பாணியில் நடிகரிடமே மோசடி… இரிடியம் கும்பலிடம் கோடிகளை இழந்த விக்னேஷ்.!!

இரிடியம் மோசடி கும்பலிடம் 1.82 கோடியை இழந்த சினிமா திரைப்பட நடிகர் விக்னேஷ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விக்னேஷ் அளித்த புகார் மனுவில் கிழக்கு சீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து இருப்பதாகவும். தற்போது சொந்தமாக தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தான் நடத்திவரும் கடையில் ராம் பிரபு என்பவர் வாடிக்கையாளராக இருந்து வந்தார். அப்போது பேசி பழகி, இரிடியம் விற்பனை குறித்து ஏராளமான தகவல்கள் மற்றும் அதுதொடர்பான ரகசிய கூட்டங்களை நடத்தி அதில் தான் கலந்துகொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

சட்டபூர்வமாகவும் ரிசர்வ் வங்கியின் அனுமதியுடனும் இந்த இரிடியம் தொழிலை செய்து வருவதாகவும் ரூ.5 லட்சம் கொடுத்தால் 500 கோடியாக லாபம் கிடைக்கும் எனக் கூறி நம்ப வைத்திருக்கிறார். இதனை நம்பிய நடிகர் விக்னேஷ் 1.82 கோடி ரூபாயை ராம்பிரபுவிடம் கொடுத்ததாகவும், லாபத் தொகையை கொடுக்காமல் கொடுத்த பணத்தையும் திருப்பி அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.

அவரை பற்றி விசாரணை செய்த போது இதே போன்று ஏராளமான நபர்களிடம் அவர் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததாகவும் விருதுநகர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என தெரிய வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தான் இழந்த தொகையை மீட்டுத்தருமாறு சென்னை மாநகர காவல் ஆணைய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார் நடிகர் விக்னேஷ்.