அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில வாலிபர் பரிதாப பலி..

கோவை:
ஒடிசாவை சேர்ந்தவர் அப்துல் அர்பஞ் கான் (வயது 24). இவர் கோவை எஸ்.எஸ் குளம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் அன்னூர் – கோவை ரோட்டில் மானிக்கம்பாளையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையொரம் நடந்து சென்ற அப்துல் அர்பஞ் கான் மீது மோதி நிற்காமல் சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற மர்ம நபர் யார்? விபத்தை ஏற்படுத்தியது எந்த வாகனம்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.