செல்போனில் ஹெட் செட் மூலம் பாட்டு கேட்டு தண்டவாளத்தில் நடந்து சென்ற ஒட்டல் ஊழியர் ரயிலில் அடிபட்டு பரிதாப பலி …

கோவை: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம் பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 40 )இவர் கிணத்துக்கடவு பக்கமுள்ள முள்ளுப்பாடி ரயில்வே கேட் மேம்பாலம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார் .நேற்று காலை செல்போனில் ஹெட் செட் மூலம் பாட்டு கேட்டுக் கொண்டு முள்ளுப்பாடியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வந்த ரெயில் கார்த்திக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.