செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரக் கோரி கோவை கலெக்டரிடம் மனு கொடுத்த மூதாட்டி..!

கோவை உப்பிலிபாளையம் பஜனை கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 80). இவரது கணவர் சுந்தர்ராஜ். இவர்களது மகன் செந்தில்குமார். இருவரும் இறந்து விட்டனர். செந்தில்குமார் லாரி டிரைவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கிருஷ்ணகிரிக்கு லாரி ஓட்டி சென்றார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாரியம்மாள் தனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து உள்ளார். அப்போது அவரது மகன் செந்தில் குமார் பயன்படுத்திய பை ஒன்று கிடைத்தது. அதனைப் பார்த்தபோது அதில் ரூ.15 ஆயிரம் பழைய செல்லாத ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகள் இருந்தன. இதனிடையே அந்த மூதாட்டி அந்த ரூபாய் நோட்டுகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் வந்து கலெக்டரிடம் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தர வேண்டும் என மனு அளித்தார்.