நடிகர் திலகம் சிவாஜியின் சொத்து பிரிப்பதில் பிரச்சனை: நடிகர் பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு..!!

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சிவாஜி கணேசன் தான் நடிகராக இருந்தபோது பல இடங்களில் சொத்துக்கள் வாங்கி இருந்தார். அதன் இன்றைய மதிப்பு சுமார் 271 கோடி ஆகும். சிவாஜி கணேசன் மறைவுக்கு பின்னர், அவரது வாரிசுக்கள் அவருடைய சொத்துக்களை அனுபவித்து வருகின்றன.

இந்நிலையில், தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை நடிகர் பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும் சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், தன்னுடைய தந்தை சிவாஜி சம்பாதித்த சொத்து தொடர்பாக அவர் உயில் எழுதி வைக்காத நிலையில், பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களின் தாய் வழி சொத்துக்களிலும் தங்களுக்கு பங்கு வழங்கவில்லை எனவும் அவர் சேர்த்து வைத்த சுமார் 10 கோடி மதிப்புள்ள 1000 சவரன் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்களையும் தங்களுக்கு தராமல் ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதே போல் கோபாலபுரதில் இருந்த வீட்டை 5 கோடி ரூபாய்க்கு பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும் இராயபேட்டையில் உள்ள 4 வீடுகள் மூலம் வரும் வாடகையில் கூட தங்களுக்கு எந்த பங்கும் வழங்குவதில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் இந்த பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட்டு பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

இந்த வழக்கில் பிரபு மற்றும் ராம்குமாரின் மகன்கள் விக்ரம் பிரபு மற்றும் துஷ்யந்த் ஆகியோரையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.