தவறான சிகிச்சையால் சிறுவன் பார்வை இழப்பு: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை தனியார் கண் மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!!

தவறான சிகிச்சையால் பார்வையிழந்த சிறுவனுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜபாளையம் அருகே சோழபுரத்தைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் அர்ஜுனன். 2002-ல் 2-ம் வகுப்பு படித்தபோது, தளவாய்புரத்தில் மதுரை தனியார் கண் மருத்துவமனை நடத்திய மருத்துவ முகாமில் கலந்துகொண்டார். அவருக்குப் பார்வைக் குறைபாடு இருந்ததால், மதுரை மருத்துவமனையில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும், பார்வைக் குறைபாடு சரியாகவில்லை. 2009 வரை தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆனாலும், பார்வை கிடைக்கவில்லை. அதையடுத்து, சிறுவனின் பெற்றோர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிறுவனின் கண்களை பரிசோதித்தபோது, அவர் பார்வை இழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, சிறுவனின் தந்தை மூக்கையா விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 2010-ல் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுவனுக்கு இழப்பீடாக மதுரையைச் சேர்ந்த தனியார் கண் மருத்துவமனை ரூ.8 லட்சமும், மன உளைச்சலுக்காக ரூ.2 லட்சமும், வழக்குச் செலவுக்காக ரூ.10 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டது.