கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையின் 3வது மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை..

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கோவை கணபதி அருகே உள்ள சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். தொழிலாளி இவருக்கு திருமணம் முடிந்த மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிப் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகம் தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் குடித்து வந்துள்ளார். இதற்கிடையே அவர் கடந்த சில மாதங்களாக 24 மணி நேரமும் குடித்துக் கொண்டே இருந்துள்ளார். இதனால் ஆறுமுகத்துக்கு சிகிச்சை அளித்து குடிப் பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வர உறவினர்கள் முடிவு செய்தனர். இதற்காக அவர் ஆறுமுகத்தை கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருக்கும் குடிப் பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் சிகிச்சை பிரிவில் கடந்த 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆறுமுகம் சிகிச்சை எடுத்துக் கொள்ள சரியான ஒத்துழைப்பு கொடுக்காததுடன், சிகிச்சை கொடுக்கும் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார். அத்துடன் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகத்தை தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இதற்கிடையே ஊழியர்கள் ஆறுமுகத்துக்கு சிகிச்சை அளிக்க சென்றனர். அப்பொழுது அவர் இருந்த அறையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே யாரும் இல்லை அக்கம், பக்கத்தில் உள்ள அறைகளில் தேடி பார்த்தனர். அங்கும் அவர் கிடைக்கவில்லை. அப்பொழுது தான் ஆறுமுகம் அந்த மருத்துவமனையில் உள்ள 3 – வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்து சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.