கோவை அருகே ரயில் என்ஜின் மோதி காட்டு யானை பரிதாப பலி – டிரைவர் மீது வழக்குபதிவு.!!

கோவை வழியாக கேரளாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மதுக்கரைக்கும் -கஞ்சி கோட்டுக்கும் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக தண்டவாளத்தை கடந்த காட்டு யானை மீது ரயில் என்ஜின் மோதியது.. இதில் யானை படுகாயம் அடைந்தது. கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி ஜோசப் தாமஸ் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் ரயில் இன்ஜின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அவசர ஆலோசனை கூட்டம் கேரள வனத்துறை அமைச்சர் சசீந்தரன் பாலக்காடு மாவட்ட கலெக்டர் சித்ரா ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் வனத்துறை முதன்மை அதிகாரி விஜய் ஆனந்த் ,வனத்துறை அதிகாரி ஜோசப் தாமஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-கடந்த 22 ஆண்டுகளில் கேரளாவில் 28 காட்டு யானைகள் ரயிலில் சிக்கி இறந்துள்ளன. இரவு நேரங்களில் விபத்து ஏற்படுவதை தடுக்க ரயில் தண்டவாளங்கள் அருகே ரூ 4 கோடியே 60 லட்சம் செலவில் 600 சோலார் விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் உள்ள காட்டுப் பகுதியில் 35 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் ரயில்களை இயக்கும் இன்ஜின் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.