சவுக்கு சங்கர் மீது திருச்சி பெண் டிஎஸ்பி புகார்.!!

சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு என்ற இரு நபர்கள் தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களையும் இழிவுபடுத்தி உள்நோக்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.பெண் காவலர்கள் கடுமையான இன்னல்களுக்கு மத்தியில் காவல் துறையில் பணிபுரியும் சூழலில் மேற்கண்ட காணொளியின் காரணமாக பொது வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் பின்னடைவை சந்தித்து உள்ளனர். மேலும், நாட்டிலேயே பெண் காவலர்களை அதிகமாக உள்ளடக்கி முன்மாதிரியாக அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும், சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களிலும் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் காவல் அதிகாரிகள் வரை அனைவரையும் இழிவுபடுத்தும் விதமாக இந்த காணொளி அமைந்துள்ளது.

சவுக்கு சங்கரின் இத்தகைய காணொளியினால் காவல் துறையிலும், பிற அரசு துறைகளிலும் பணிபுரியும் பெண்கள் அனைவரும் பதவி உயர்விற்காகவும், பணி இட மாறுதல்களுக்காகவும், பாலியல் ரீதியாக உயர் அதிகாரிகளிடம் சமரசம் செய்து கொள்வதாக கூறி ஒட்டு மொத்த பெண் இனத்தையே இழிவுபடுத்தியுள்ளார். திருச்சி மாவட்டத்தில், நேரடியாக தேர்வு செய்யப்பட்டு தற்போது முசிறி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் M.A. யாஸ்மின், இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், மேற்படி காணொளியானது சமுதாயத்தில் பல்வேறு துறைகளில், குறிப்பாக காவல் துறையில் பாலின சமத்துவ வேறுபாடின்றி சீரிய முறையில் பணிபுரிந்து வரும் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாவட்டம் சைபர் கிரைம் 21/24 U/s 294(b), 353, 509 IPC, 67 IT act and 4 of TN prohibition of harassment of women act பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்படி குற்ற செயலுக்கு தூண்டுதலாக இருந்த பெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் இரண்டாம் குற்றவாளியாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே கணொளி தொடர்பாக, கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி காணொளியினால் பாதிக்கப்பட்ட பெண் காவலர்கள் பலர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட கணினிசார் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் இன்று (08.05.24) ஆம் தேதி காலை திருச்சி மாவட்ட கணினிசார் குற்றப்பிரிவு குற்ற எண் : 21/24 U/s 294(b), 353, 509 IPC, 67 IT act and 4 of TN prohibition of harassment of women act வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை சம்பிரதாய கைது (Formal arrest) செய்துள்ளனர். மேலும், இவ்வழக்கின் இரண்டாம் குற்றவாளியான பெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் மீது குற்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக சட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது பிரபல youtube சவுக்கு சங்கருக்கு மேலும் மேலும் வழக்குகள் அதிகமாகும் என்று பார்க்கப்படுகிறது.