முட்புதரில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை: தாயை தேடும் போலீசார்- கள்ளகாதலில் பிறந்ததா என விசாரணை..!

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்து சுப்பையா கவுண்டன்புதூர் உள்ளது. இங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் முட்புதரில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.
இதனைக் கேட்ட அந்த வழியாக சென்றவர்கள், முட்புதருக்குள் சென்று பார்த்தனர். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. சேலையில் சுற்றப்பட்டு இருந்த அந்த பச்சிளம் குழந்தையின் தொப்புள் கொடி கூட அறுக்கப்படவில்லை.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்ததால் பெண்கள் அந்தக் குழந்தையை எடுத்து அரவணைத்தனர். ஆனால் குழந்தை தொடர்ந்து அழுததால் பெண்கள் உடனே பால் வாங்கி குழந்தைக்கு கொடுத்தனர். பாலை குடித்ததும் குழந்தை அழுகையை நிறுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். பின்னர் அந்த பச்சிளம் ஆண் குழந்தை குழந்தைகள் நல அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை முட்புதரில் வீசிச்சென்றது யார்? கள்ளகாதலில் பிறந்ததால் முட்புதரில் பச்சிளம் குழந்தை வீசப்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொள்ளாச்சி ஆஸ்பத்திரிகளில் நேற்று பிறந்த குழந்தைகளின் விவரங்களையும் சேகரித்து குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்.