உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள அதிகளவு புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட கோவை வாலிபர் உயிரிழப்பு..

கோவை மணியக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினகர்(30). இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். மேலும் உடலை முறுக்கேற்ற உடற்பயிற்சி கூடத்துக்கு செல்லும் அவர் அதிகளவில் அசைவ உணவுகள் மற்றும் புரோட்டீன் பவுடர் உட்கொண்டு வந்துள்ளார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் திடீரென வாந்தி மற்றும் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். குடும்பத்தினர் அவருக்கு வாந்தி நிற்பதற்காக மாத்திரையும் கொடுத்துள்ளார். இருப்பினும் கடும் வயிற்று வலியால் தொடர்ந்து அவதிப்பட்டதை தொடர்ந்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமான புரோட்டீன் பவுடர் உட்கொண்ட வாலிபர் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.