மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு..

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, ஆமிதாநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சவுந்தரராஜன் (35). தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கீதாலட்சுமி என்கிற மனைவியும், 3 வயதில் மிதுன் மற்றும் ஒன்றரை வயதில் கவின் ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த 2-ம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்பும்போது செங்குன்றம் அருகே சாலை விபத்தில் சவுந்தரராஜனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.15 மணி அளவில் அவர் மூளைச்சாவு அடைந்தார். சவுந்தரராஜனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன.

ஒரு சிறுநீரகம், இரண்டு கண்கள், தோல் ஆகியவை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 4 நோயாளிகளுக்கும், இதயம், நுரையீரல், மற்றொரு சிறுநீரகம் ஆகியவை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 3 நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டன. மூளைச்சாவு அடைந்த சவுந்தரராஜனின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.