தடுப்புச் சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் காருக்குள் இருந்து வெளியே விழுந்து 5 மாத குழந்தை பரிதாப பலி..

கோவை: ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் சென்னையில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவர்களது 5 மாத பெண் குழந்தை பிரதிக் ஷா அந்த குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் நிகழ்ச்சிக்காக குடும்பத்தினர் 7 பேருடன் நேற்று காரில் குருவாயூர் கோயிலுக்கு சென்றனர். அங்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் காரில் ஈரோடு புறப்பட்டனர். அவர்களின் கார் மதுக்கரை போடிபபாளையம் அருகே நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது .இதனால் காரில் இருந்த 7 பேரும் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே தாயின் மடியில் இருந்த குழந்தை பிரதிக் ஷா காருக்குள் இருந்து வெளியே தவறி விழுந்தது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது. கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் நடந்த விபத்தில் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது .இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..