சத்தியமங்கலம் அருகே ஆடு திருடிய வாலிபர் கைது..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி அரசு மறுவாழ்வு இல்லம் அருகே வசித்து வருபவர் மாணிக்கம் (53). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில்  தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் சத்தம் போடுவதை கண்ட மாணிக்கம் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு நபர்கள் மற்றும் ஒரு பெண் என மூன்று பேரும் சேர்ந்து ஒரு ஆட்டை திருடி இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு தப்பி ஓடினர். மாணிக்கம் அவர்களை துரத்திச் சென்று பிடிக்க முடியாததால் இது குறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணன் (30) என்ற நபர் ஆடு திருட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கலைவாணனை கைது செய்த போலீசார் திருடப்பட்ட ஆட்டை பறிமுதல் செய்ததோடு, கலைவாணன் உடன் சேர்ந்து ஆடு திருட்டில் ஈடுபட்ட  ஆண், பெண் என இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.