நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் போக்ஸோவில் கைது..!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு எஸ்டேட்டை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் உடுமலையில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல்லடம் கரடிவாவியை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 2 வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். கடந்த 21-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அவரை 16 வயது சிறுவன் பல்லடத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் திருமண ஆசை காட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
மாணவி வீட்டிற்கு செல்லாததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து அவரது பெற்றோர் வால்பாறை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்தநிலையில் மாணவி சிறுவனுடன் தங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் பல்லடத்துக்கு சென்று சிறுவனுடன் தங்கி இருந்த மாணவியை மீட்டனர். பின்னர் வால்பாறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை சிறுவன் திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.