கோவை குறிச்சி குளத்தில் விரைவில் படகு சவாரி தொடக்கம்- மாநகராட்சி அதிகாரி தகவல்..!

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் சீரமைத்தல், குடிநீர், பாதாள சாக்கடை, சூரிய மின்சக்தி, எல்.இ.டி விளக்குகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், மாதிரி சாலைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. வாலாங்குளம், பெரியகுளத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டதை அடுத்து மக்கள் மகிழ்ச்சியுடன் படகில் சவாரி செய்து வருகின்றனர். இதனிடையே கோவை குறிச்சிகுளத்திலும் படகு சவாரி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52.16 கோடி
மதிப்பீட்டில் குறிச்சி குளம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிச்சி குளம் 334.92 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குளத்தின் கொள்ளளவு 50
மில்லியன் கன அடி ஆகும். இக்குளத்தின் மொத்த நீர்பிடிப்புப் பகுதி 12.30
சதுர கிலோ மீட்டர் கொண்டதாகும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதிவண்டி பாதை, நடைப்யிற்சி நடைபாதை,
குளக்க ரையில் 4 இடங்களில் அலங்கார வளைவுகள். பாதசாரிகள் உண்டு மகிழ
குளக்கரையின் ஓரத்தில் 47 சிற்றுண்டிகள் மற்றும் பல வகையான சிறு
அங்காடிகள், கோவை -பொள்ளாச்சி சாலையின் மேற்புறம் நவீன வகையான வாகன
நிறுத்துமிடம், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள், குளத்தைச் சுற்றி
5.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு வண்ண மயமான அலங்கார விளக்குகள். 4
இடங்களில் சூரிய ஒளி மின்சார தகடுகள், 36 இடங்களில் காற்றாலைக்
கோபுரங்கள். 23 இடங்களில் பார்வையாளர் மாடங்கள், மாலை நேரத்தில் சூரிய
அஸ்தமனக் காட்சியினை கண்டுகளிக்க ஏதுவாக சிறப்பு பார்வையாளர் மாடம், 2
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் வாலாங்குளம் மற்றும் பெரியகுளத்தில் உள்ளது போன்று குறிச்சி
குளத்திலும் படகு சவாரி திட்டம் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம்
திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை வாலாங்குளம் மற்றும் பெரியகுளத்தை காட்டிலும் குறிச்சி குளத்தின்
பரப்பளவு பெரியதாக காணப்படுகிறது. குறிச்சி குளத்தில் படகு இல்லம்
அமைப்பது குறித்து விரைவில் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு மேற்கொள்ள
உள்ளது. அதன் பின்னர் விரைவாக படகு இல்லம் அமைத்து படகு சவாரி
தொடங்கப்படும். குறிச்சி குளத்தில் ஆண்டுக்கு ஒரு முறை படகு போட்டியும்
நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.