234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி

தமிழக அரசை கண்டித்து நேற்றைய தினம் (மார்ச் 12) தமிழகம் முழுவதும்தவெக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டும், சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. அந்தவகையில், ஈரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழக அரசியல் சூழல் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துகளை அவர் முன்வைத்தார் அவ்வாறு, ஆர்ப்பாட்டத்தில் பேசிய செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகப் பண்பு குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். “நான் கட்சியில் இணைந்தபோது, எனது சட்டைப் பையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களை வைத்திருந்தேன். அதைக் கண்ட விஜய், ‘அந்தத் தலைவர்களின் படங்களை எப்போதும் உங்கள் பாக்கெட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். மற்ற தலைவர்களின் மீது இவ்வளவு மரியாதை கொண்ட ஒரு தலைவரைப் பார்ப்பது அரிது,” என்று அவர் புகழாரம் சூட்டினார்.
தவெகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள ‘விசில்’ சின்னம் குறித்துப் பேசிய அவர், “விசில் சின்னம் கிடைத்த பிறகு போலீசார், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் விசில் அடிக்கக் கூடாது என ஆளுங்கட்சியினர் மறைமுகமாக நெருக்கடி கொடுக்கின்றனர். எத்தனை தடைகள் வந்தாலும், தமிழகத்தைக் காக்கத் தலைவர் விஜய் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்,” என்றார்.

தமிழகத்தை இத்தனை காலம் ஆண்டுவரும் திராவிட இயக்கங்கள் மக்களை ஏமாற்றி வருவதாகச் செங்கோட்டையன் குற்றம் சாட்டினார். “எல்லோருக்கும் எல்லாம் என்று கூறிக்கொண்டு சாதி மற்றும் மத அரசியலைத் தூண்டுகிறார்கள். தவெகவின் வளர்ச்சியைப் பார்த்து அஞ்சும் அவர்கள், எங்களது கூட்டங்களுக்கு மண்டபம் கொடுக்கக் கூட மறுக்கிறார்கள். மண்டபம் கொடுத்தால் மின்சாரம் துண்டிக்கப்படும் அல்லது வரி விதிக்கப்படும் என்று மிரட்டல்கள் வருகின்றன,” என்று அவர் ஆதங்கப்பட்டார்.

கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய அவர், வரும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் யாருடனும் கூட்டணி வைக்காது என்பதை உறுதிப்படுத்தினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடும். தலைவர் விஜய் யாரைச் சுட்டிக்காட்டுகிறாரோ அவர்களே வேட்பாளர்கள். போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக வரலாறு படைக்கப்படும் என அவர் சூளுரைத்தார்.தமிழகத்துக்கு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டும் தேவையில்லை. விஜய்தான் முதல்வராகவேண்டும் என்கிற உணர்வோடு, அனைவரும் கூடியிருக்கின்றனர். தவெக கூட்டத்தை பார்த்து, தேர்தலில் நிற்கலாமா, வேண்டாமா என்று பலரும் அச்சப்படுகின்றனர். தமிழகத்தில், எந்த சக்தியாலும் தவெகவை வெல்லமுடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப்பிறகு, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற விஜய் வந்திருக்கிறார். தமிழகத்தில் மீண்டும் ஒரு மாற்றம் நிகழவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்

பெரியார் மண்ணான ஈரோட்டிற்குத் தலைவர் விஜய் விரைவில் வருவார். அப்போது அவரது எழுச்சி உரை இங்கிருக்கும் அரசியலை மாற்றும். 10 தேர்தல்களைச் சந்தித்த எனக்கே, குழந்தைகளே தங்கள் பெற்றோரிடம் விஜய்க்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறும் இந்தப் புரட்சியைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது,” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.