லாரி வாடகை உயர்வு – அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம்!

தொடர் டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை ஏற்றம் மற்றும் சுங்கக் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் லாரி வாடகை கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம், அதன் தலைவர் தனராஜ் தலைமையில் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் லாரி தொழிலைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளனத் தலைவர் தனராஜ் தெரிவித்ததாவது, சமீபகாலமாக டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடைசியாக லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது லாரி தொழிலை கடுமையாக முடக்கியுள்ளது. லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். வேறு வழியின்றி, தவிர்க்க முடியாத சூழ்நிலையாலேயே இந்த 25 சதவீத வாடகை உயர்வை அறிவிக்கிறோம். இந்த திடீர் உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு நாங்கள் வருந்துகிறோம். மத்திய அரசு உடனடியாக இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றார்.

தற்போது 25 டன் எடை கொண்ட கனரக லாரிகளுக்கு வசூலிக்கப்படும் கட்டண விவரமும், வரவிருக்கும் புதிய மாற்றங்களும் பின்வருமாறு, நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு கனரக லாரிகளில் 25 டன் எடை ஏற்றப்படுகிறது. இதில் டன்னுக்கு ரூ.1,000-ம் வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 25 சதவீத கட்டண உயர்வால் வருகிற 15-ந் தேதி முதல் கூடுதலாக ரூ.6 ஆயிரம் வரை கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது. தற்போது நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு டன்னுக்கு ரூ.1,000-ம், மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு டன்னுக்கு ரூ.750-ம், நாமக்கல்- தூத்துக்குடிக்கு ரூ.1,200 வரையும், நாமக்கல்- ஓசூருக்கு டன்னுக்கு ரூ.900-ம் பெறப்படுகிறது. நாமக்கல்-ஈரோட்டிற்கு ரூ.500 டன்னுக்கு பெறப்படுகிறது. இவை அனைத்திற்கும் வருகிற 15-ந் தேதி முதல் 25 சதவீதம் கட்டண உயர்வு அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயங்கி வரும் நிலையில், இந்த வாடகை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் வாகனங்களில் பொருத்தப்படும் ஜி.பி.எஸ் கருவிகள் மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. எனவே, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, குறைந்த விலையில் இக்கருவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், இதனைப் பொருத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வட மாநிலங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆயுட்காலம் முடிந்த தமிழக லாரிகளுக்கான சிறப்பு அனுமதியை, மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.